Monday, March 21, 2011

வெயிலின் வாசனை

வெயில் காலம் வருவதை எவ்வாறு அறியலாம்? 
மார்கழி முடியும் தருணத்திலே மாமரம் பூத்துவிடுகிறது. அதை தொடர்ந்து பாதாமின் இலைகள் இளஞ்சிவப்பிலிருந்து செம்மஞ்சள்வரை உள்ள அத்தனை சிவப்பின் வண்ணங்களைக் காட்டி உதிர்ந்துவிடுகின்றன. அதற்கு பின் பொகைன்வில்லா கொத்து கொத்தாய் பூக்கின்றது.

வெயிலின் வருகையை யார் சொல்வார்?

ஒரு வாசனை சொல்லும். வெயில் துவங்கும் நேரத்தில் வேப்பமரம் இலை உதிர்க்கும். மற்ற மரங்களும் இதே நேரத்தில் பூக்களும் இலைகளும் உதிர்த்துவிடுகின்றன தான். ஆனால் காய்ந்து, விழுந்த வேப்பை இலைகளின் வாசனை தான் வெயிலின் முதல் அறிவிப்பு. இந்த காலத்தில் மற்ற வாசனைகளின் அடி நாதம் இது தான் - அழுகும் பூக்கள், திறந்த கழிவுநீர் வாய்க்கால், செத்த எலி, வாகனங்களின் புகை - இவை எல்லாம் தங்கள் உள்மணம்தனை வெயில் காலத்தில் திறந்து காட்டுகின்றன. வெயில் காலத்தில் மூக்கிற்கு எல்லாமே சற்று அதிக வீச்சோடு தென்படும். ஆனால் வேப்பை தான் வெப்பத்தின் அடிநாதம். மறந்த குழந்தைபருவங்கள், வெயிலை நண்பனாய் கொண்டாடிய மத்தியான வேளைகள், வெயில் காலத்து வண்டுகளின் ரீங்காரம், தகதகக்கும் வெயில், வியர்வை, வியர்வையின் வாசனை, தூங்கும் வீடுகள், இவை எல்லாம் அந்த வாசனையுடன் கலந்திருக்கின்றன. ஒரு கம்மிய, மங்கிய, கனத்த வாசனை. வேப்பை, வெப்பம், வியர்வை உறைந்த வாசனை.

Saturday, March 12, 2011

தொலைக்காட்சி

ஒரு கனவு நிழலாடுகிறது. திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு. இந்த கனவு ஒரு மணி நேரத்துக்கு அம்பது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைந்து ஓட்டினால் வெடித்துவிடும் என்று. அலறிக்கொண்டு அக்செலரேடர் மீதிருந்த காலைத் தூக்கினேன். கனவு வெடித்து சிதறியது. 

துகள்கள் காற்றில் பறந்து சென்றன.

அணுமின் உற்பத்தி நிலையத்தின் மீது புகை மண்டலம். சில பெண்கள் அலுங்கி குலுங்கி ஒரு பேருந்தில் ஆடுகிறார்கள். ஒரு பெரிய பாம்பு ஒரு கறுப்பின மனிதனை முழுவதுமாக முழுங்குகிறது. ஒரு சிறு பையன் சமையல் செய்கிறான். டைடானிக் கப்பல் உருவாகிய கதை ஒருத்தர் சொல்கிறார். "என்ன விலை அழகே" என்று ஒருவன் பாடுகிறான். சுனாமி தாக்கி ஆயிரத்திற்கு மேலான மக்கள் சாவு. "நீ இன்றி நானும் இல்லை, என் காதல் பொய்யும் இல்லை," என்று இன்னொருவன் பாடுகிறான். எல்லாம் பொய் தான், மகளே, என்று ஒரு தந்தை ஆறுதல் சொல்கிறார். இரு கல்லூரிப் பெண்கள் குத்தி, சுட்டு கொலை. பொது வெளிகளில், காலை பொழுதுகளில். எந்த இடமும் உனக்கு பாதுகாப்பு கிடையாது. எந்த வேளையும் உனக்கு நல்ல நேரம் கிடையாது. ஒரு கனவாக பொறந்த ஒரே குற்றத்துக்காக நீ சாக வேண்டும், என்று மறுபடியும் தொலைபேசி அழைப்பில் ஒரு குரல் மிரட்டியது.

ரீமோட்டை அழுத்தினேன்.

துகள்கள் சுருண்டு, உருண்டு இருளிற்குள் மறைந்து, காணாமல் போக, பல கனவுகளின் பேய்கள் என்னை சூழ்ந்து கொண்டன. 

படம்: Speed திரைப்படக் காட்சி