Monday, August 22, 2011

அவள்

ஒடுக்கப்படுகிறாள். ஒடுக்குகிறாள். என்னை அவள் பிம்பத்தில் செதுக்க உளியுடன் வருகிறாள். என் சதையும், ரத்தமும் கல்லாய் உறைகின்றன.

சாதியை அன்பூற்றி வளர்த்தவள் இவள். 'நாமெல்லாம் இப்படி,' 'அவர்களெல்லாம் அப்படி' என்று மனிதத்திற்கே நீர் தெளிப்பாள். பல ஆயுதம் ஏந்தும் கொலைகார சாதியத்தின்  அடியாள் அவள். 'நீ அவனுடன் பேசினால் படிப்பை நிறுத்துவேன்.' 'நீ அவளைத் திருமணம் செய்தால் தற்கொலை செய்வேன்.' மிரட்டலின் ராணிக்கு, காதலின் எதிரிக்கு எப்படி அன்பின் உறைவிடம் என்று பெயர்வைத்தார்கள்?

பின் சாமியை உருண்டை உருண்டையாக உருட்டி, 'அதோ பார் விழா,' 'இதோ பார் புது உடை,' என்று அறியா பருவத்தில் வாயினுள் சாமியைத் திணித்தவள். மறுக்க வாயைத் திறந்தபோது, 'உள்ளே உலகமே சுழலுதே' என்று பரவசத்தில் மூழ்கினாள். ஏசு நாதரின் மறு பிறவியாக என்னை அறிவித்து, சிலுவையில் அறைந்துவிடக்கூடாதே என்று வாயை மூடினேன்.

 உயிருடன் பெண்ணை அக்கினிக்கு ஊட்டிவிடும் சடங்கு இன்னும் ஓயவில்லை. சமையலறை அவளை ஒரு முப்பதாண்டுகளாவது வாட்டி, வதக்கி, வேகவைத்து, பொறித்து, சுட்டெரித்திருக்கும். பல ஆயிரம் தோசை அவளை சுட்டிருக்கும். சில நூறு பனியாரம் அவளை பொறித்திருக்கும். எத்தனை முறை சோறு அவளை உலையில் போட்டதோ. யார் அறிவார். அந்த நரக வேதனையை ஒரு நாளும் பேசமாட்டாள். வெந்து வதங்க புது புது முறைகள் கண்டுபிடிப்பாள்.

(இவை பெண் வேலை, இவை ஆண் வேலை. முலை இருப்பது பால் சுரக்கவும், பால் பொங்க வைக்கவும், காபி பரிமாறவும் உதவுகிறது. மூளை இருப்பதினால் யாருக்கு என்ன லாபம்?)

பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுப்பாள் - அடக்க ஒடுக்கமாக, அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் ஏதுவாக, கையில், காலில், கழுத்தில் விலங்குகளோடு - தங்கத்தில் செய்தாலும் சங்கிலி, சங்கிலி தானே?

அவள் ஒரு புதைகுழி. தேவைகளால், வெறுப்புகளால், விருப்பங்களால் என்னை உள்வாங்குகிறாள். பெரும் பாதாளங்களை மூடும் மேக மூட்டம் அவள். பஞ்சைப் போல் மென்மையாக தெரிகிறதே என்று அவள் அரவணைப்பில் விழுந்தால், அந்தரத்தில் இருப்பது வெகு நேரம் தெரியாமல் போகலாம்.

கொஞ்சி குலாவி தாலாட்டி சீராட்டி சோறூட்டி ஆளாக்கி. போதும்பா உங்க தாய்மையான பொய்கள். 

படம்: ஜாமினி ராயின் தாயும் குழந்தையும் 

Saturday, August 6, 2011

பலி



கண் விழித்தபோது, ஒரு கல் மேடையின் மேல் கிடந்தேன், கையும், காலும் விலங்குகள் பூட்டப்பட்டு.

மேலே கழுகுகள் வட்டமிட்டன.

கொடூர அலறல்கள் திடீரென்று பக்கத்தில், திடீரென்று வெகு தூரத்தில் ஒலித்தன.

ஒரு வியர்வை துளி என் கண்ணின் ஓரத்தில் இருந்து விழுந்தது. 'அழுகிறாயா?' ஒரு அமைதியான குரல் கேட்டது.

தலையை திருப்பமுடியவில்லை. சூரியன் கண்ணுள் குடிகொண்டுவிட்ட மாதிரி எரிச்சல், கண்ணீர் வழிய, பார்வை மங்கியது. ஒளி கீற்றுகள் கடலின் வழி இறங்குவது போல், கடலடியில் இருந்து சூரியனைப் பார்ப்பது போல் ஒரு உணர்வு. ஆனாலும் கண் எரிகிறது.

ஏதோ ஒரு மிருகம் அருகில் இருந்து உறுமுகிறது. கழுகின் அலறல் காதைக் கிழித்தது. வெயில், வியர்வை, உறுமல், அலறல்.

மீண்டும் அந்த குரல், 'தண்ணீர் வேண்டுமா?' இப்பொழுது என் தாகமும் எனக்கு நினைவூட்டப்பட்டது. காய்ந்த தொண்டையில் ஈரம் வரவழைக்க முயல்கிறேன். 'ஆம்' என்று சொல்ல எத்தனிக்கிறேன். வெறும் ஒரு வறண்ட சத்தம், மழை நேர தவளைகள் குதூகூலத்திற்கு ஒத்த ஒரு சத்தம் வெளிவந்தது.

இன்னொரு வியர்வை துளி என் மேல் உதட்டில் பூக்க, அதை நக்கப் பார்க்கிறேன். நாக்கின் சொரசரப்பு புதிதாக இருக்கிறது, துளி மறைந்த இடம் தெரியவில்லை, காய்ந்த நாக்கிற்கு எந்த ஈரமும் சேர்ந்ததாக தெரியவில்லை. தாகம். வியர்வை.

உறுமல்.

இப்பொழுது உறுமல் வெகு அருகில், பயத்தில் விம்முகிறேன். கண்ணீர் சொட்டு என் முகத்தருகே விழ, அந்த மிருகம் என் முகத்தில் மூச்சுப்பட குனிந்து, அதன் வறண்ட நாக்கினால் நக்கிய பின் லேசாக உறுமலின் தொனி மாறுகிறது. என் முகத்தை, என் கண்ணருகில் நக்கியது. அதன் கண்கள் மட்டும் நினைவில் நின்றன. எரியும் தங்கத்தைப் போல் தகிக்கும் அந்த கண்கள். என் அழுகை நின்றதும் என் கன்னத்தில் பல் பதித்தது. மீண்டும் பயத்தில் அழுதேன். மீண்டும் கண்ணீரை நக்கியது.

'நீ அழும் வரை அது உன்னை சாப்பிடாது,' என்றது அந்த அமைதியான குரல்.

சூரியனைக் கண்ணில் தாங்கி, உயிரைக் கண்ணீர் துளியில் பதுக்கிவைத்து கிடந்தேன், உயிர்பலியாய்.

Sunday, May 15, 2011

கதை


ஒரு கதையுடன் கர்ப்பமாய் இருக்கிறேன். அதன் தந்தை யாரென்று தெரியவில்லை. எத்தனை கதைகளுடன் கட்டி புரண்டிருப்பேன், உரை அணியும் எண்ணமெல்லாம் மறந்து...

இப்பொழுது கதை என்னுள் புரள்கிறது.

சுற்றி சில பேர் சிரிக்கிறார்கள், நக்கலாக, இளக்காரமாக. சிலர் லேசான கோபத்துடன் கேட்கிறார்கள், இந்த கதையை பெற்றெடுப்பேன் என்று ஏன் அடம்பிடிக்கிறாய்? ஒரு கதையை வளர்க்கும் அறிவு உனக்கு இருக்கா? மற்ற சிலர் பரிவுடன் கேட்பது போல் பேசுகிறார்கள். திடீரென்று நடுவில் ஒரு கேள்வி. ஆனால் தந்தை யார் என்று உனக்கு கட்டாயம் ஒரு யூகமாவது இருக்கனுமே...நான் மௌனம் சாதிக்கிறேன்.

அம்மா அழுகிறாள், தந்தை தெரியாத கதைகளைப் பெற்றுப்போடவா உன்னை வளர்த்தேன், என்று.

காலைகளில் அசையமுடியவில்லை. குடலை புரட்டிபோடும் குமட்டல். வார்த்தைகள் உள்ளே கொந்தளிக்கின்றன, என்னை கடைந்தெடுக்கின்றன.

மதியம் ஒரு பாப்லோ நெரூடா கவிதையும் சில ஜேம்ஸ் ஜாய்ஸ் வாக்கியங்களையும் மெதுவாக கொறித்துக் கொண்டிருக்கிறேன். கதை என்னுள் சிரிக்கிறது.

தங்கை போனில் அழைக்கிறாள். பெண்ணாக இருந்தால் என் பெயரை வைக்க வேண்டும், சரியா? என்கிறாள். வேறு வேலை இல்லை எனக்கு, என்று அவளுடன் கோவிச்சுக்கொள்கிறேன்.

நல்லதம்மா, உடனே கருகலைப்பு என்று ஏதும் செய்யவில்லையே, என்று சித்தி ஆறுதலடைகிறாள்.

யாரும் இல்லாத சமயத்தில், கதையுடன் ரகசியமாக பேசிக்கொள்கிறேன். உலகத்தில் நடப்பவை, அஸ்தமிக்கும் சூரியன்களும், விரியும் இலைகள், உலகில் தினம் எத்தனை கதைகள் பிறக்கின்றன, கதைகளுக்கு பிடித்த வார்த்தை விளையாட்டுகள், ஒரு கதையாடலுக்கு எவ்வாறு தாலாட்டு பாடுவது என்று பல விஷயம் சொல்கிறேன் கதையிடம். எல்லாவற்றையும் அது கேட்டுக்கொண்டிருக்கும். நடுவில் வேலை வந்து நான் பேச்சை நிறுத்தினால், வேகமாக வளரும் கதாபாத்திரங்களால் என்னை வதைக்கும். மறுபடியும் அதற்கு புது விஷயங்கள் சொல்லவேண்டும்.

மருத்துவரிடம் செல்கிறேன். பாரம்மா, இந்த கதைகளைப் பெற்றெடுப்பது ஒரு சனியே பிடிச்ச வாழ்கை, பொம்பளைக்கு இது எல்லாம் அழகில்லை, என்று அறிவுறுத்தினாள். அப்படியா, என்று கேட்டேன். அப்பொழுது இந்த கதைகருவை கலைத்துவிடலாமா என்று கேட்டாள். முடியவே முடியாது, என்றேன். ஏன், கருகலைப்பிற்கு உன் மதத்தில் தடை ஏதும் இருக்கிறதா, என்று கேட்டாள். 

கதைகரு என்னை உதைத்தது. என்னம்மா, என்று கேட்டு, என் வளரும் வயிற்றின் மீது கைவைத்தேன். 

கதை பேசியது.

டாக்டர், கேட்கிறதா உங்களுக்கு, என் கதை பேசுகிறது! அம்மா என்று சொல்கிறது, என்று பூரித்தேன்.

ஐயோ, நான் ஆமா என்று சொன்னேன், என்றது கதை. 

எதற்காக? என்று கேட்டேன். 

ஆமா, இப்போ என்ன வச்சு உன்னோட பெண்ணியத்த பேசத் தொடங்காத, என்று சொல்ல வந்தேன், என்று சொன்னது கதை.

இந்த சின்ன கருவிற்கு எவ்வளவு அறிவு பாருங்கள், டாக்டர். 

ஐயோ, நான் அறிவாளிக் கிடையாது, என்று மறுத்தது கரு.

நான் கரு, அவ்வளவுதான்.

அதற்குப்பின் கதைகரு பேசவில்லை.

சில நிமிடம் மௌனம் காத்த டாக்டர், லேசாக சிரித்தாள். இப்பவே இதுக்கு இவ்வளவு திமிரு, இன்னு சில மாசத்தில பாரு. தேவை இல்லாத நேரத்துல பேசும், திடீரென்று புது கதாபாத்திரங்கள் முளைக்கும், அப்புறம் ரத்தம் சொட்ட சொட்ட உருவெடுக்கும், தேவையா இதெல்லாம், என்றாள்.

எத்தனை மாதங்கள் ஆகும், டாக்டர்?

யாருக்கு தெரியும், என்றாள். 

ஒரு சில்வியா பிளாத் கவிதையை மென்றவாறு, ஆஸ்பித்திரியில் இருந்து கிளம்பினேன். என்னம்மா, ஒலகமே இடிஞ்சு விழுந்த மாதிரி மொகத்த வச்சிருக்க, என்று ஒரு மூதாட்டி கேட்டாள். 

கதையுடன் கர்ப்பமாய் இருக்கிறேன், என்றேன்.

அவள் ஆறுதலாக தோளைத் தட்டிகொடுத்துவிட்டாள். கதையோட முடிஞ்சிருச்சுன்னு சந்தோசப்படும்மா, இதே நாவலா இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப, என்று கேட்டாள்.

கதைகரு கனவு காணத் தொடங்கியது. வளர்ந்தவுடன் பெரிய நாவலாக வேண்டும் என்று. 

மிரண்டு போய் வீடு திரும்பினேன். நீல் கேமன் எழுதிய புது கதை ஒன்று என் கட்டிலில் கிடந்தது. என்ன இத்தனை நேரம், என்று கேட்டது. அப்புறம் பல வித பார்வைகள், சீர்குலைப்புகள், வருடல்கள், தேடல்கள், திகில்கள் எல்லாம் முடிந்தன.

எழுந்த பிறகு உணர்ந்தேன், இன்னொரு கரு என்னுள் உருகொள்வதை.

*********

Saturday, April 9, 2011

பெண் புத்தகப்புழுவாக இருக்கலாமா?

புத்தகங்களைப் பற்றியக் கட்டுரை என்று ஆர்வமாக படிக்க தொடங்கிய வாசகிக்கு ஒரு திடீர் அதிர்ச்சி. இந்த கட்டுரை அவளுக்காக எழுதப்படவில்லை. அவனுக்காக எழுதப்பட்டது. கட்டுரையை சொந்தமாக்க முடிவெடுத்தாள். 'வாசகன்' பதில் 'வாசகி'யை ஏற்றினாள். 'அவனுக்கு' பதில் 'அவளுக்கு' என்று ஆக்கினாள்.


ஆனால் புத்தக வாசகிக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவளைப்பற்றிக் கொள்கிறது, அவள் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறாள், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறாள், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறாள், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறாள், ஆகவே புத்தகவாசகி ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறாள்.....என்று எழுதினாள். 

'அவள்' சேர்ந்தவுடன் வாக்கியங்களுக்குள் வேறு அர்த்தங்கள் உதித்தது ஏன்? உறுத்தல் குறைந்தப்பாடில்லை.

நினைவுகள் அவளை சுழன்று எட்டுத்திக்கிலும் இழுக்கின்றன.

நகைக்கு செலவு செய்யும் பெற்றோரிடம் புத்தகங்களுக்காக கெஞ்சியது "இப்ப நீங்க செலவு பண்ணுறதுல பத்துல ஒரு பங்கு கூட வேண்டா, நூறுல ஒரு பங்கு மட்டு புக்ஸ் வாங்க தாங்களே," என்று அழுதது.

"பொம்பள பிள்ள. எப்ப பாத்தாலும் புத்தகத்துள்ள மூக்க நொழச்சுட்டு இருக்கலாமா?" என்று திட்டிய பாட்டி (பி.ஏ. படிக்கத் தொடங்கி பாதியிலே திருமணம் செய்யப்பட்ட பாட்டி).

தன் பள்ளி நூலகத்திலிருந்து கடன் வாங்கிய புத்தகம் ஒன்றில் பெண் உறுப்புகளின் பெயர்கள் அத்தனையும் அடிகோடிட்டு வைத்திருந்தான் எவனோ.  இவளுக்கு புரியவில்லை. முலைகள் அழகான அங்கங்கள் தான். சந்தேகமில்லை. அவற்றின் பெயரை அச்சில் கண்டால் கூட பேனாவால் வருடிப்பார்க்க வேண்டிய தேவை இவளுக்கு புரியவில்லை.

பல மணி நேரங்கள் பல நூலகங்களுள் நினைவை தொலைத்தது. 

பல ரயில் பயணங்களின் நடுவே ஒரு புத்தக பயணத்தில் தொலைந்தது.  

"இவள் புத்தகப்புழு," என்று பல ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், காதலர்கள் சந்தோஷத்துடனும், சலிப்புடனும், கோபத்துடனும், அன்புடனும், ஆதங்கத்துடனும், பயத்துடனும், மரியாதையுடனும், கர்வத்துடனும் சொல்வார்கள்.


"வீட்டோர் சொல்கிறார்கள்," "வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது", "ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார்" "அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது" "பழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை. அதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,"

யார் நினைக்கிறார்கள்? யார் அவர்கள்? அதே முலைகள் கொண்ட, புத்தகம் வாசிக்காத, சனியே பிடிச்ச பெண்கள் தானா? 

ஒரு நாள் ஒரு காதலன் அவள் வீட்டுக்குள் வந்தான். நிரம்பி வழியும் புத்தக அடுக்குகளை பார்த்தான். இது தான் உன் கணவனா? என்று கேட்டான். ஆம், என்றாள்.

இன்று கூட தன் கணவனின் கூரிய காகித நுனிகள் தன் கன்னத்தைக் கீற எழுந்தாள். படுக்கையில் பாதி புத்தகங்களுக்கான இடம். பிறகு என்ன? பாவப்பட்ட ஆண் வாசகனுக்காக வருத்தப்பட நேரமில்லை. (பெண் வாசகியான) என் பயணங்களைத் தொடர்கிறேன். 

பின் குறிப்புகள்: சாய்வெழுத்துக்கள் அத்தனையும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய  'புத்தகங்களை என்ன செய்வது?' என்கிற கட்டுரையிலிருந்து அப்படியே, அல்லது சில மாற்றங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. 

முதல் புகைபடம் : டேவிட் ப்லாச்க்வெஸ் 

இரண்டாம் படத்தின் ஓவியர்: மேரி கசாட். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் வரைகலை பயில்வதற்கு பல தடைகள் இருந்து காலங்களில் பெண்களின், குழந்தைகளின் அந்தரங்க வாழ்வின் தருணங்களை மிக இயல்பாக வர்ணித்தவர்.  

மூன்றாம், நான்காம் படத்தின் ஓவியர்: இதய நாயகர் பிக்காஸோ.

Monday, March 21, 2011

வெயிலின் வாசனை

வெயில் காலம் வருவதை எவ்வாறு அறியலாம்? 
மார்கழி முடியும் தருணத்திலே மாமரம் பூத்துவிடுகிறது. அதை தொடர்ந்து பாதாமின் இலைகள் இளஞ்சிவப்பிலிருந்து செம்மஞ்சள்வரை உள்ள அத்தனை சிவப்பின் வண்ணங்களைக் காட்டி உதிர்ந்துவிடுகின்றன. அதற்கு பின் பொகைன்வில்லா கொத்து கொத்தாய் பூக்கின்றது.

வெயிலின் வருகையை யார் சொல்வார்?

ஒரு வாசனை சொல்லும். வெயில் துவங்கும் நேரத்தில் வேப்பமரம் இலை உதிர்க்கும். மற்ற மரங்களும் இதே நேரத்தில் பூக்களும் இலைகளும் உதிர்த்துவிடுகின்றன தான். ஆனால் காய்ந்து, விழுந்த வேப்பை இலைகளின் வாசனை தான் வெயிலின் முதல் அறிவிப்பு. இந்த காலத்தில் மற்ற வாசனைகளின் அடி நாதம் இது தான் - அழுகும் பூக்கள், திறந்த கழிவுநீர் வாய்க்கால், செத்த எலி, வாகனங்களின் புகை - இவை எல்லாம் தங்கள் உள்மணம்தனை வெயில் காலத்தில் திறந்து காட்டுகின்றன. வெயில் காலத்தில் மூக்கிற்கு எல்லாமே சற்று அதிக வீச்சோடு தென்படும். ஆனால் வேப்பை தான் வெப்பத்தின் அடிநாதம். மறந்த குழந்தைபருவங்கள், வெயிலை நண்பனாய் கொண்டாடிய மத்தியான வேளைகள், வெயில் காலத்து வண்டுகளின் ரீங்காரம், தகதகக்கும் வெயில், வியர்வை, வியர்வையின் வாசனை, தூங்கும் வீடுகள், இவை எல்லாம் அந்த வாசனையுடன் கலந்திருக்கின்றன. ஒரு கம்மிய, மங்கிய, கனத்த வாசனை. வேப்பை, வெப்பம், வியர்வை உறைந்த வாசனை.