Saturday, August 6, 2011

பலி



கண் விழித்தபோது, ஒரு கல் மேடையின் மேல் கிடந்தேன், கையும், காலும் விலங்குகள் பூட்டப்பட்டு.

மேலே கழுகுகள் வட்டமிட்டன.

கொடூர அலறல்கள் திடீரென்று பக்கத்தில், திடீரென்று வெகு தூரத்தில் ஒலித்தன.

ஒரு வியர்வை துளி என் கண்ணின் ஓரத்தில் இருந்து விழுந்தது. 'அழுகிறாயா?' ஒரு அமைதியான குரல் கேட்டது.

தலையை திருப்பமுடியவில்லை. சூரியன் கண்ணுள் குடிகொண்டுவிட்ட மாதிரி எரிச்சல், கண்ணீர் வழிய, பார்வை மங்கியது. ஒளி கீற்றுகள் கடலின் வழி இறங்குவது போல், கடலடியில் இருந்து சூரியனைப் பார்ப்பது போல் ஒரு உணர்வு. ஆனாலும் கண் எரிகிறது.

ஏதோ ஒரு மிருகம் அருகில் இருந்து உறுமுகிறது. கழுகின் அலறல் காதைக் கிழித்தது. வெயில், வியர்வை, உறுமல், அலறல்.

மீண்டும் அந்த குரல், 'தண்ணீர் வேண்டுமா?' இப்பொழுது என் தாகமும் எனக்கு நினைவூட்டப்பட்டது. காய்ந்த தொண்டையில் ஈரம் வரவழைக்க முயல்கிறேன். 'ஆம்' என்று சொல்ல எத்தனிக்கிறேன். வெறும் ஒரு வறண்ட சத்தம், மழை நேர தவளைகள் குதூகூலத்திற்கு ஒத்த ஒரு சத்தம் வெளிவந்தது.

இன்னொரு வியர்வை துளி என் மேல் உதட்டில் பூக்க, அதை நக்கப் பார்க்கிறேன். நாக்கின் சொரசரப்பு புதிதாக இருக்கிறது, துளி மறைந்த இடம் தெரியவில்லை, காய்ந்த நாக்கிற்கு எந்த ஈரமும் சேர்ந்ததாக தெரியவில்லை. தாகம். வியர்வை.

உறுமல்.

இப்பொழுது உறுமல் வெகு அருகில், பயத்தில் விம்முகிறேன். கண்ணீர் சொட்டு என் முகத்தருகே விழ, அந்த மிருகம் என் முகத்தில் மூச்சுப்பட குனிந்து, அதன் வறண்ட நாக்கினால் நக்கிய பின் லேசாக உறுமலின் தொனி மாறுகிறது. என் முகத்தை, என் கண்ணருகில் நக்கியது. அதன் கண்கள் மட்டும் நினைவில் நின்றன. எரியும் தங்கத்தைப் போல் தகிக்கும் அந்த கண்கள். என் அழுகை நின்றதும் என் கன்னத்தில் பல் பதித்தது. மீண்டும் பயத்தில் அழுதேன். மீண்டும் கண்ணீரை நக்கியது.

'நீ அழும் வரை அது உன்னை சாப்பிடாது,' என்றது அந்த அமைதியான குரல்.

சூரியனைக் கண்ணில் தாங்கி, உயிரைக் கண்ணீர் துளியில் பதுக்கிவைத்து கிடந்தேன், உயிர்பலியாய்.

1 comment:

  1. எருமை மாட்டின் கதை அருமையாக வந்திருக்கு..!

    …எருதின் புண் காக்கை அறியாது என்பது பழமொழி

    தொடர்ந்து எழுதுங்கள் மலர்....

    ReplyDelete