புத்தகங்களாலான வனாந்திரத்தை மெதுவாக கடந்து சென்றாள். இரு பக்கமும் வறண்டு போன புத்தக மலைகள் வானுயர வளர்ந்திருந்தன. சில நேரம் அழுதுக் கொண்டும், சில நேரம் புத்தகங்களை லேசாக விரல்களால் வருடிக்கொண்டும் அவள் சென்றாள். இடிந்த அரண்மனைகள், வளரும் அரசுகள், அழிந்து போன நாடுகள், விஸ்தரிக்கும் எல்லைகள், எல்லாம் புத்தகங்களுக்குள் பதுங்கிக் கிடந்தன. தெரியாமல் ஒன்றை திறந்துவிட்டால் இடம், நேரம், நம்பிக்கை, எல்லாம் தலைகீழாக மாறுவதற்கு வாய்ப்பிருந்தது. எவற்றையும் திறக்காமல் சென்றாள்.
மனிதர்கலாலான வனாந்திரத்திற்கு இறங்கி சென்றாள். வலது காலை எடுத்து வைக்க முயற்சித்தாள். பின் எடது காலை. மனிதர்கள் புகை போல் அவளை சூழ்ந்துகொண்டு, முகர்ந்து பார்த்தார்கள். புத்தகங்களின் வாடை அவள் உடல் எங்கும் பரவியிருந்தது. முடியில், ஆடையில், விரல் நுனிகளில் - பழைய காகிதத்தின் வாசனை படர்ந்திருந்தது. மனிதர்கள் லேசாக பின் வாங்கினார்கள், அவர்களின் வனாந்திரத்தின் எல்லை கோடுகளை கவனமாக வரைந்தார்கள், அவள் கால்கள் வெளியே இருக்கும் படியாக எல்லை கோடுகள் வரைந்தார்கள். அவள் அழுகையெல்லாம் பல நூற்றாண்டிற்கு முன்னரே உறைந்து போய்விட்டது. இப்பொழுது புன்னகையுடன், திரும்பி பார்க்காமல், கீழே இறங்கினாள்.
எல்லைகள் மறைந்தன. காலம் மறைந்தது. ஆதி குகையில், ஆதாமும், பிரம்மனும் குளிர் காய்வதை நிறுத்தி விட்டு இவளை திரும்பி பார்த்தார்கள். 'அந்த ஏவாள் சனியே செஞ்ச சதியா இருக்குமோ?' ஆதாம் கேட்டான். பிரம்மன் மௌனத்தை அழிக்காமல், தன புடுக்கிலிருந்து மனிதர்களை உருவாக்க முயன்றான். இவள் உரக்க சிரித்தாள். 'உனக்கு மனிதர்களை உண்டாக்கும் அறிவிருக்கிறது என்று யார் சொன்னா?' என்று கேட்டாள்.
புத்தகத்தைத் திறந்தாள். ஆதி குகை, ஆதி மனிதன், ஆதி உலகம், அதன் மேல் கட்டப்பட்ட மனிதர்கலாளன வனாந்திரம், அதன் மேல் கட்டப்பட்ட புத்தகங்களாலான வனாந்திரம் என்று ஒரு அடுக்கி வைத்த உலகினை புத்தகம் இவளுக்கு காட்டியது.குழந்தைகளின் லீகோ செங்கல்கள் மாதிரி. சுண்டு விரலால் செங்கல்களை சிதரியடித்தாள். இவை எல்லைகள் பங்கு போட்டுக் கொள்ளும் சகோதர தேசங்கள் தான், என்றாள்.
புத்தகங்களாலான வனாந்திரத்தில் கொட்டகையிட்டு, நேரம் செலவிடுவதற்கு காகிதத்தினாலான உலகங்களையும், தேசங்களையும் உருவாக்கி அழித்துக்கொண்டிருந்தாள்.
(படங்கள் அனைத்தும் இங்கிருந்து)
No comments:
Post a Comment